இந்தியாவில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர், நான்கு மாதங்களுக்கு முன் இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.அந்தக் குழந்தைக்கு பிறந்ததிலிருந்தே வயிறு வீக்கமும், மூச்சுத்திணறலும் இருந்து வந்தது. மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சோதனை செய்ததில், குழந்தைக்கு வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. முதலில் நீர்க்கட்டி என்றும் புற்றுநோய்க் கட்டி என்றும் மருத்துவர்கள் ஆய்வுசெய்தனர். அப்படி எதுவும் இல்லை என உறுதியானதும் அந்தக் கட்டியை அறுவைச்சிகிச்சையின் மூலம் அகற்ற முடிவுசெய்தனர். அறுவைசிகிச்சையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அகற்றப்பட்ட கட்டியானது, 14 செமீ அகலத்துக்கு 12 செமீ உயரமாக இருந்தது. அது இன்னொரு கருவைப்போல இருந்தது. தண்டுவடம் தவிர கை விரல்கள், தலைமுடி ஆகியன அதில் இருந்தன. இந்தத் தாய்க்கு, இரட்டைக் கரு உருவாகி, அதில் ஒன்று உருவானவுடனேயே இன்னொரு கருவுக்குள் போய்விட்டது. ஐந்து லட்சத்தில் ஒன்றுதான் இதுபோல ஏற்படும் என்று அறுவைச்சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்தார். |