![Why do Backs Pain? - Food Habits and Nutrition Guide in Tamil Why do Backs Pain? - Food Habits and Nutrition Guide in Tamil](http://www.koodal.com/contents_koodal/health/images/Dhanurasanam24.jpg)
பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்ற ஏதாவது ஒரு வலியால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறோம். இதற்கு தனிப்பட்ட பல காரணங்கள் இருப்பினும் இந்த வலிகளில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதுதான் உண்மை.
இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்குகின்றன. அந்த மூட்டுக்குள் நரம்புகள், ரத்தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அன்றாடம் பாதிக்கப்படுவது முதுகு வலியால்தான்.
நாம் நேராக நிமிர்ந்து நடக்க, நிற்க உதவுபவை முதுகுத் தண்டும் அது சார்ந்த எலும்புகளும்தான். அதனூடேதான் மூளை தொடர்பான தண்டுவடம் சென்று அத்தனை உறுப்புகளிலிருந்து வரும் தகவல்களை மூளைக்கு கொண்டு செல்ல பயன்படுகிறது.
இந்த தண்டுவடத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும் எலும்புகள் மொத்தம் 32. இந்த எலும்புகளுக்கு இடையே தட்டுக்களும் அதில் ஈரத் தன்மையுடனான சவ்வுகளும் இருப்பதால், நாம் அசைகையில், குதிக்கும்போது, இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது, ஆட்டோவில் செல்லும்போது என குதிகாலில் அதிர்வுகள் ஏற்படாது இருக்க உதவுகிறது. குண்டு - குழியான பாதையில் இரு சக்கர வாகனத்தில் அடிக்கடி வெகுதூரம் பயணிப்பது, இருக்கையில் நேராக சரியான நிலையில் உட்காராமல் இருப்பது, முறையற்ற உடற்பயிற்சி, அல்லது உடற்பயிற்சியே இல்லாமை, எலும்புகளில் ஏற்படும் சுண்ணாம்புக் குறைவு, சரியாக குணப்படுத்தப்படாத வாயுக் கோளாறு, முதுமை ஆகியவை காரணமாக இந்தத் தட்டுக்கள் பாதிக்கப்பட்டு கழுத்து, இடுப்பில் வலி ஏற்படும். இடுப்பு, கழுத்து தலைப் பகுதிகளில் தீவிர வலி, தசைகளில் இறுக்கம் ஏற்படும். இவற்றுடன் இடுப்பு எலும்புத் தேய்வு, காரணமாக பிட்டம், பின்னங்கால் தொடைப் பகுதிகளில் வலி ஏற்படக் கூடும். காலை உயர்த்தும்போது வலி கூடும். கழுத்து எலும்பு தேய்மானம் அடையும் நிலையில் கைகளில் வலியும், உள்ளங்கையில் மரத்துப்போன உணர்வும், சில நேரங்களில் எறும்பு ஊறுவது போன்றும், எரிச்சல் போன்றும் வலி ஏற்படும்.
தட்டு நகர்வின் அளவு திசை மற்றும் எந்தப் பகுதி தட்டுக்கள் பாதித்துள்ளன என்பதைப் பொருத்து வலியும் வேதனையும் மாறுபடும். நோயாளியைப் பரிசோதனை செய்வது, எக்ஸ்ரே படம் ஆகியவை மூலம் பாதிப்பைத் துல்லியமாகக் கணிக்க முடியும். கட்டுப்பாடின்றி சிறுநீர் கழித்தல், உணர்வு மாற்றம் அதிகம் இருப்பின் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் பரிசோதனைகள் தேவைப்படலாம். உணவு, உடற்பயிற்சி, உள் மருந்து, புற மருந்து என சித்த மருத்துவத்தில் கூட்டு சிகிச்சை மூலம் இடுப்பு, கழுத்து வலி, தட்டு பிறழ்தல் பிரச்சினையை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியும். உருளைக்கிழங்கு, பட்டாணி, காராமணி, வாழைக்காய், அதிக புளி, குளிர்பானங்கள் ஆகியவற்றை இந்த நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக வாயு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய உணவுப்பொருட்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். உணவில் முடக்கறுத்தான் கீரை, இஞ்சி, புதினா, பூண்டு போன்ற வாயு நீக்கும் உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய சரியான உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் ஆகியவை சில நேரங்களில் கழுத்து, இடுப்பு வலி பிரச்சினையை உள் மருந்துகள் இல்லாமலே குணப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. அதனால் இவற்றை செய்யலாம்.
சூரிய நமஸ்காரம், திரிகோணாசனம், வஜ்ராசனம், யோகமுத்ரா, மகாமுத்ரா, சலபாசனம், தனுராசனம், புஜங்காசனம், போன்ற ஆசனப் பயிற்சிகள் மருந்துகளுடன் சேர்ந்து நோயை விரைவில் குணப்படுத்திட உதவும். சித்த மருத்துவத்தில் இந்த நோயை தொக்கண சிகிச்சையான புற மருத்துவ முறையிலும், வர்ம உள் மருந்துகளாலும் குணப்படுத்த முடியும். கழுத்து, இடுப்பு, முதுகு எலும்பு வலி பிரச்சினை வந்து விட்டால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சித்த மருத்துவம் அதன் பிரிவான தொக்கண மருத்துவம், வர்ம மருத்துவம் ஆகியவை மூலம் வலியை குறைத்து முழு நிவாரணத்தைப் பெறலாம்.
ஆங்கில மருந்துகள்:
வலி நிவாரணிகளைக் கொடுப்பார்கள். இல்லை என்றால் அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்று சொல்லி விடுவார்கள். ஆனால் இதனால் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. வலி மாத்திரைகள் வயிற்றைக் கெடுத்து அல்சரை உண்டாக்கும். அதனால் எச்சரிக்கை தேவை.
ஹோமியோபதி மருந்துகள்:
cimicifuga, aloes, arnica, rhustox, bryonia போன்ற மருந்துகள் முழுமையான பலனைத் தரும். வலிகளைக் குறைப்பதோடு தசைகளை இலகுவாக்கி நிரந்தரமாக குணப்படுத்தும். பயோகெமிக் மருந்துகளும், பயோகெமிக் கூட்டுக்கலவை மருந்துகளும் உடனடி பலனை அளிக்கும். மேற்குறிப்பிட்ட நோய்களுக்கு ஹோமியோபதி மருத்துவம் நிரந்தர நிவாரணம் அளிக்கும் என்பது நிச்சயம். எனவே அச்சம் தேவையில்லை.