• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Tuesday, April 5, 2011

    தாய்ப்பால் தரக்கூடிய மரபணு மாற்றுப் பசு

    மரபணு மாற்றப்பட்ட பசுக்களை சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். தாய்ப்பாலில் உள்ள சத்துகள் அடங்கிய பாலை இந்த பசுக்களே தருமென்று அவர்கள் கூறியுள்ளனர்.இதற்காக மொத்தம் 300 பசுக்களை மரபணு மாற்றம் செய்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக லண்டனில் இருந்து வெளியாகும் "தி சண்டே டெலிகிராப்" பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
    அதில் மரபணு மாற்ற பசுக்களை உருவாக்கிய குழுவின் தலைமை விஞ்ஞானி நிங் லீ கூறியுள்ளதாவது: இந்த பசுக்கள் தரும் பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், தொற்று நோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.
    பொதுவாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குத் தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும். பசும் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அது கிடைக்காது. ஆனால் எங்கள் குழு உருவாக்கியுள்ள பசுக்களின் பாலில் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துகளும், நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது.
    குளோனிங் மூலம் புதிய உயிர்களை உருவாக்கும் முறையைப் பயன்படுத்தி பசுக்களின் மரபணுவில் மாற்றம் செய்து அவற்றை தாய்ப்பால் தரும் வகையில் மாற்றியுள்ளோம். "லைசோசைம்" எனப்படும் புரதச்சத்து இருப்பது தான் தாய்ப்பாலின் சிறப்பு அம்சம். இதுவே தாய்ப்பாலில் அதிகம் இருக்கிறது.
    இந்த புரதசத்து தான் குழந்தைப் பருவத்தில் பக்டீரியா மூலம் ஏற்படும் நோய்களை எதிர்க்க உதவுகிறது. இது எங்கள் பசுக்களிலும் உள்ளது. எனவே எங்கள் பசுக்கள் தரும் பால் தாய்ப்பாலுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் என்றார்.
    எனினும் இந்த மாற்றுத் தாய்ப்பாலுக்கு பலத்த எதிர்ப்பும் எழுந்துள்ளது. இது எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசு தரும் பாலை பச்சிளம் குழந்தைகளுக்குக் கொடுத்தால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்ற சந்தேகங்களும் கிளம்பியுள்ளது.