• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, March 3, 2011

    'கரு'விலே உயிர் கொடுத்த தம்பி!

    -பா.பிரவீன்குமார்
    தாலசீமியா என்பது கொடுமையான ஒரு பரம்பரை நோய்! இது ரத்தத்தில் ஆக்சிஜன் கொண்டு செல்லும் ஹீமோகுளோபினை செயலிழக்கச் செய்யும். அதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் பாதிக்கப்பட்டு, தீவிரமான ரத்த சோகையை ஏற்படுத்தும்! இந்த நோய் தாக்கியவர்களுக்கு, மாதாமாதம் ரத்த மாற்று சிகிச்சை மேற்கொண்டே ஆகவேண்டும். இதை கவனிக்காமல் விட்டால், ரத்த சோகை முற்றி, உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டு. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 ஆயிரம் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 10 சதவிகிதம் குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவை!

    இந்த விநோத நோயால்  கோவையைச் சேர்ந்த தாமிரபரணி என்ற குழந்தை பாதிக்கப்பட்டாள். அவளுக்கு எட்டு வயதில் இந்தச் சோகம் சூழ்ந்தது.  
    ;பெற்றோரின் தீவிர மருத்துவப் போராட்டத்துக்குப் பிறகு, தற்போது அந்தக் குழந்தை நன்கு உடல்நலம் பெற்றுத் தேறவே... மருத்துவ உலகமே வியப்பில் ஆழ்ந்துள்ளது! இந்தத் தகவல் நமக்கும் கிடைக்கவே, தாமிரபரணியின் தந்தை செந்தில்குமாரிடம் பேசினோம்.
    'என் மகளுக்கு ஒன்றரை வயதில் இருந்தே உடல்நிலை பாதிக்கப்பட்டது. தலை முடி கொட்டியது. நடக்க முடியாது, விளையாட முடியாது என்ற அவளது நிலையைப் பார்த்துப் பார்த்துக்  கலங்கிவிட்டோம். எப்படியும் அவளை குணமாக்கியே தீரவேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் தொடர்ந்து இருந்தது. சிகிச்சையை மட்டும் விடவே இல்லை. ஒருவருஷமோ இரண்டு வருஷமோ அல்ல... மொத்தம்  ஆறரை ஆண்டுகளாக மாதம்தோறும் ரத்தம் மாற்றும் சிகிச்சை செய்து  வந்தோம். இந்தக் கட்டத்தில் நாங்கள் டாக்டர் ரேவதி ராஜிடம் சிகிச்சைக்காகக் குழந்தையை அழைத்துச் சென்றோம். அப்போது அவர் கூறிய ஒரு நவீன மருத்துவத் தொழில்நுட்பம்தான், இன்று என் குழந்தையின் நோயை முழுமையாகப் போக்கி, அவளுக்கு மறு ஜென்மம் கொடுத்து உள்ளது!'' என்று முன்னோட்டம் கொடுத்தவர், ஆவலைத் தூண்டும் அந்த மருத்துவ முறை பற்றி சொன்னார்.
    ''டாக்டர் ரேவதி ராஜி எங்களுக்கு 'ஸ்டெம்செல்’ மருத்துவம் பற்றி எடுத்துக் கூறினார். 'நீங்கள் இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளுங்கள். அந்தக் குழந்தையின் தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் 'ஸ்டெம்செல்’லைக் கொண்டு நாம் தாமிரபரணியைக் காப்பாற்ற முயற்சி எடுக்கலாம். ஆனால், இதில் 25 சதவிகிதம் மட்டுமே வெற்றிவாய்ப்பு உள்ளது’ என்று சொன்னார்.
    தாமிரபரணி படும் அவஸ்தைகளைக் காண சகிக்காமல், இதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். எங்களுக்கு அவள் குணமானால் போதும், எதையும் செய்யத் தயாராகவே இருந்தோம். என் மனைவி கர்ப்பம் ஆனார். ஆனால், அந்த சிசுவுக்கும் இந்த கொடிய நோயின் பாதிப்பு இருந்து விதி எங்கள் வாழ்க்கையில் விளையாடியது.  எங்கள் துன்பத்தை ரெண்டு மடங்கு ஆக்கியது இந்த சம்பவம். இதனால் மிகுந்த துயரத்துக்கு ஆளானபோது, அந்தக் கருவைக் கலைத்துவிடும்படி டாக்டர் கூறினார். மிகுந்த மனவேதனையுடன் கருவைக் கலைத்தோம்.
    அடுத்து மீண்டும் ஒரு முறை என் மனைவி கர்ப்பமானார். இந்த முறை கருவில் உதித்த குழந்தைக்கு நல்லவேளையாக எந்த நோய் பாதிப்புமே இல்லை. கடவுளின் கருணை தொடங்கிவிட்டதாகவே நினைத்தோம்.  நல்லபடியாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கு புகழேந்தி என்று பெயர் வைத்தோம். அவனுடைய தொப்புள் கொடி மற்றும் எலும்பு மஜ்ஜையில் இருந்து 'ஸ்டெம்செல்’ எடுத்து தாமிரபரணிக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவளின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு படிப்படியாக அதிகரித்து, தற்போது பூரண குணமடைந்துவிட்டாள்! இதனால் புகழேந்திக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அக்காவுக்கு தம்பி புகழேந்தியால் மறுவாழ்வு கிடைத்துள்ளது!'' என்றார் சந்தோஷம் கண்களில் மின்ன.
    ''ஸ்டெம்செல் என்றால் என்ன? அதனால் என்ன பயன்?'' என்று அடுத்தடுத்த கேள்விகள் நம் மண்டையைக் குடைய... சென்னையில் ஸ்டெம்செல் சேமிப்பு சேவை வழங்கும் 'லைஃப்செல்’ நிறுவன தலைமை அறிவியல் அதிகாரி அஜீத்குமாரிடம் இதுபற்றி விசாரித்தோம்.
    ''ஸ்டெம்செல் கண்டுபிடிப்பு 1960-களில் இருந்தே தொடங்கிவிட்டது. இது மருத்துவத் துறையில், மனிதன் எதிர்நோக்கும் எல்லா நோய்களுக்கும் தீர்வளிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டெம்செல்கள் என்பது உடலின் மாஸ்டர் செல்கள்! என்ன மாதிரியான செல்லாக அது பிற்பாடு மாறப்போகிறது என்று தெரியாத, 'பிளாங்’கான செல்கள் அவை. இந்த செல்கள் மனித உடலின் எல்லா வகையான திசுக்களையும் மறுபடியும் உருவாக்கக்கூடிய திறன் கொண்டவை. மேலும் இவை மிக விரைவாகத் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் தன்மையும் கொண்டவை.
    இந்த ஸ்டெம்செல்கள் நமது உடலின் எலும்பு மஜ்ஜை, கருத் திசுக்கள், தொப்புள்கொடி ரத்தம் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படும். மருத்துவக் கழிவு என்று ஒதுக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்தத்தில் இருந்தும்கூட அதிக அளவில் ஸ்டெம்செல்கள் கிடைக்கின்றன. தற்போது புதிதாக 'மேசன்ஸிமெல் ஸ்டெம்செல்’ என்ற புதிய வகையும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தற்போது ஆராய்ச்சி அளவில் உள்ளது. இதன் மூலம் நரம்புமண்டலம், இதயம், எலும்பு, உடல் பருமன் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தலாம்.
    ஆனால், யார் வேண்டுமானாலும் யாருக்கும் ஸ்டெம்செல் அளிக்க முடியாது. மிகவும் நெருங்கிய உறவுகளில் வாய்ப்பு அதிகம். ஸ்டெம்செல் மருத்துவம் முழு அளவில் கைகொடுக்க ஒரு சிறந்த வழி உள்ளது. அதாவது, அவரவர் ஸ்டெம்செல்களை சேமித்துவைத்துக் கொண்டால், நிச்சயம் எதிர்காலத்தில் அது முழு அளவில் பயன்படும்!'' என்று சொல்லி நிறுத்தியவர், தொடர்ந்தார்.
    ''தற்போது இந்த ஸ்டெம்செல் ஆராய்ச்சியில், மாதவிடாய் ரத்தத்தில்கூட அதிக அளவு வளம்மிக்க ஸ்டெம்செல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொப்புள்கொடி ரத்தத்தைப் போல் அல்லாமல், ரத்தம் சாராத மைய நரம்பு மண்டலத்தை சிதைக்கும் நோயான பார்கின்சன்ஸ், முதுகுத் தண்டுவட காயங்கள், லுக்கேமியா போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும், இது முதுமை அடைவதைத் தடுக்கும் சிகிச்சை போன்ற அழகுக் கலை சிகிச்சைக்கும் பயன்படும் என்று கண்டறிந்துள்ளனர். ஆனால், சமீபத்திய ஆய்வுகள், ஸ்டெம்செல்களை யார் சேமித்து வைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் பயன்படுவதோடு இல்லாமல், பரம்பரை ரீதியான தொடர்பு உள்ளவர்களுக்கும் அதை பயன்படுத்தலாம் என்பதை புரியவைத்துள்ளது. பல்லில் இருந்துகூட ஸ்டெம்செல் எடுப்பதும் ஆராய்ச்சியில் உள்ளது. எதிர்காலத்தில் எல்லா நோய்க்குமே ஒரே தீர்வாக இந்த ஸ்டெம்செல் துறை வளரும்!' என்றார், உறுதியாக!
    தற்போது இந்தத் தொழில்நுட்பத்தில் மற்றொரு விஷயமும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு மகாவீர் ஜெயின் மருத்துவமனையும், டெல்லி மேகதாந்த மெடிசிட்டி மருத்துவமனை டாக்டர்களும் 'சர்க்கரை நோய் மற்றும் குடிப்பழக்கத்தால் பாழாகும் கல்லீரலை ஸ்டெம்செல் மூலம் குணப்படுத்த முடியும்’ என்று கண்டுபிடித்து உள்ளனர். வரும் ஏப்ரல் மாதம், முதல்கட்டமாக 200 நோயாளிகளுக்கு இதைப் பரிசோதித்துப் பார்க்கத் திட்டமிட்டு இருக்கிறார்களாம்! ''இது வெற்றி பெற்றால், 2014-15-ம் ஆண்டு முதல் ஸ்டெம்செல் சிகிச்சைகள் பரவலாக நடக்கும்!'' என்று டெல்லி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர் சதிஷ்டோட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுப்புது தொழில்நுட்பம் வளரட்டும்... நலம் பெருகட்டும்!