• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, March 3, 2011

    "பெண்களின் ஆரோக்கியமே... தேசத்தின் ஆரோக்கியம்!''


     'பத்மஸ்ரீ’ டாக்டர் பளீர்
    இந்திய அரசின் 'பத்மஸ்ரீ’ விருதுபெற்ற சாதனையாளர்கள் வரிசையில் சமீபத்தில் இணைந்

    திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் சிவபாதம் விட்டல்! 'இந்தியாவில், நாளமில்லா சுரப்பிகள் சிகிச்சை மருத்துவத்தின் தந்தை’ என்று பெருமை சூட்டப்படும் இவர், நாற்பது ஆண்டு கால அனுபவம் பெற்றவர். இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னை மருத்துவக் கல்லூரியில் நாளமில்லா சுரப்பிகளுக்கான துறையை ஆரம்பித்தவர்; பெண்களை அதிகம் வதைக்கும் 'தைராய்டு’ பிரச்னைகளுக்கு பல காலமாக சத்தமின்றி தீர்வுகள் தந்து கொண்டிருப்பவர்.
    சென்னையில் உள்ள அவரின் 'சாய் கிருஷ்ணா ஹாஸ்பிட்ட’லில் வாழ்த்துக்களுடன் சந்தித்தோம்.
    ''மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்லதான் படிச்சேன். மேற்படிப்புகளை இங்கிலாந்துல எடின்பர்க் காலேஜ்ல படிச்சேன். பிறகு, சென்னை திரும்பி, பேராசிரியர் பதவி வரைக்கும் இருபத்து ஐந்து வருஷம் வேலை பார்த்தேன். மாணவர்கள்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். இன்னமும் கத்துக்கிட்டே இருக்கேன். இப்பகூட எம்.ஜி.ஆர். மெடிக்கல் யூனிவர்சிட்டியில கௌரவப் பேராசிரியரா இருக்கேன்’ என்ற டாக்டர், நாளமில்லா சுரப்பிகளின் பிரச்னை பக்கம் பேச்சைத் திருப்பினார்!
    ''நம்ம உடம்புல இருக்கற பிட்யூட்டரி சுரப்பி, அட்ரினல் சுரப்பி, தைராய்டு சுரப்பி எல்லாத்தையும் 'டக்லெஸ் க்ளாண்ட்'னு (Ductless gland) சொல்வாங்க. அதாவது, தேவைப்படும்போது சுரந்து, எந்த நாளங்களும் இல்லாமலே நேரடியா ரத்தத்துல கலந்துடும். அதனாலதான், 'நாளமில்லா சுரப்பிகள்’னு பேர். இதுல பெரும்பாலும் பிரச்னைகள் தர்றது, கழுத்துப் பகுதியில இருக்கற 'தைராய்டு சுரப்பி'தான். அது சுரக்கற 'தைராக்ஸின்’ ஹார்மோன், நம்ம உடம்புக்கு அவசியமானது. அதேசமயம், இயல்பைவிட அதிகமாவோ, குறைவாவோ சுரந்தா... அதுதான் பிரச்னை.
    அதிர்ச்சியான விஷயம்... இந்தியாவுல கிட்டத்தட்ட நாலு கோடி மக்கள் 'தைராய்டு’ பிரச்னைக்காக மாத்திரைகளை உபயோகிக்கறாங்க. இந்த 'தைராய்டு’ பிரச்னைகள் பொதுவா 20 சதவிகித ஆண்களையும், 80 சதவிகித பெண்களையும் பாதிக்குது. பெண்கள்தான் எப்பவும் அதிகப்படியான ஸ்டெரஸ்ஸுக்கு ஆளாகறாங்க. அதனால, காரணமில்லாம எடை கூடறது, முடி கொட்டறது, அதிக சோர்வுக்கு உள்ளாகறது, ஒழுங்கற்ற மாதவிலக்கு, அதிக ரத்தப்போக்கு, கைகள்ல நடுக்கம், நரம்பு பாதிப்புகள் இதெல்லாம் 'தைராய்டு’ அறிகுறிகள். இதெல்லாம் இருக்கற பெண்கள், தாமதிக்காம மருத்துவரை ஆலோசிக்கணும். ஏன்னா, ஆரோக்கியமான பெண்ணாலதான் ஆரோக்கியமான குடும்பத்தை நிர்வகிக்க முடியும். ஆரோக்கியமான குடும்பங்கள்தான் தேசத்தின் பெருமை!'' என்று குறிப்பிட்டார் டாக்டர்.
    இவருடைய மகன் சாய்கிருஷ்ணா, மகள் விஷ்ணுபிரியா இருவருமே நாளமில்லா சுரப்பி துறை மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு மகள் மஞ்சுளவல்லி, டயட்டீஷியன்!