உடலின் ஆரோக்கியத்தை வெளிக்காட்டுவதில் தோலுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே அதை பாதுகாப்பது மிகவும் அவசியம்.பனிக்காலத்தில் தோலில் வெடிப்பு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. குளிர் காலத்தில் தோலை வருடும் பனிக்காற்று, இதமாய் தொல்லைகளையும் தந்து விட்டு செல்கிறது. அதிகாலையில் பனி அதிகம் இருப்பதால் தோலில் வறட்சி ஏற்படுகிறது. சோப்பு போட்டுக் குளிப்பதால் தோல் வறண்டு வெள்ளை வெள்ளையாக திட்டுகள் உருவாகிறது.
வறண்ட தோலின் மீது வெயில் படும் போது சிலருக்கு அரிப்பு ஏற்படலாம். இது போன்ற தொல்லைகளைத் தவிர்க்க நீர்ப்பசை மற்றும் எண்ணெய்ப் பசை உள்ள ஈரப்பதமான சோப்பை பயன்படுத்தலாம்.
பனிக்காலத்தில் பாதங்களை பாடாய் படுத்துவது வெடிப்பு. தொடர்ந்து தண்ணீரில் வேலை செய்வது, பித்தம் காரணமாக வெடிப்பு அதிகரிக்கும். சிறிய அளவில் வெடிப்பு உள்ளவர்கள் கண்டு கொள்ளாமல் விடுவதால் அதில் அழுக்கு சேர்ந்து வலியை ஏற்படுத்தும்.
சிறிய அரிப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சொரியாசிஸ் ஏற்படவும் பனிக்காற்று காரணமாகி விடுகிறது. தலையில் பொடுகு உள்ளவர்களுக்கு பனிக்காலத்தில் தொல்லை அதிகரிக்கும். தலைப்பகுதியில் உள்ள தோலில் ஏற்படும் வறட்சியின் காரணமாக பொடுகு பிரச்சனை அதிகமாகி அது உதிரத் தொடங்கும்.
இதனால் தலைமுடி பொலிவிழந்து அரிப்பு அதிகரிக்கும். முடியும் கொட்டும். குழந்தைகளுக்கு இக்காலங்களில் கொசுக்கடியால் தோலில் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புண்டு. இதனால் தோல் பகுதியில் அரிப்பு, புண் ஆகியவை ஏற்படலாம்.
இதற்கு குளிப்பதற்கு ஈரப்பதம் உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் தோல் வறட்சியை தவிர்க்கலாம். சாதாரண சோப்பு பயன்படுத்துபவர்கள் குளித்த ஐந்து நிமிடத்துக்குள் ஈரப்பதம் நிறைந்த கிரீமை தோல் பகுதியில் தடவினால் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும் முன்னர் பத்து நிமிடம் மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் கல் உப்பு சேர்த்து கால்களை வைத்திருக்கலாம். பின்பு சுத்தமாக துடைத்து விட்டு பாத வெடிப்பு மறைவதற்கான கிரீம்களை பயன்படுத்தலாம்.
தலையில் உள்ள பொடுகினை தவிர்ப்பதற்கு வாரம் இரண்டு முறை கட்டாயம் தலைக்கு குளித்து சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். முடி வறட்சியாக இல்லாமல் பார்த்து கொள்ளவது அவசியம். இப்பிரச்சனை உள்ளவர்களின் துண்டு, சீப்பு, சோப்பு உள்ளிட்டவைகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
சொரியாசிஸ் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் உடனடியாக தோல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். பனிக்காலத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கொசுக்கடியால் தோலில் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவரின் ஆலோசனையோடு கொசு தடுப்பு கிரீம்களை தடவலாம். |